வெள்ளி, 1 மார்ச், 2019

பாக்கிஸ்தானால் இந்திய விமானப்படை வீரர் ஒப்படைக்கப்பட்ட காட்சிகள் இதோ!!

பாகிஸ்தானில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகளின் பாலகோட் பயிற்சி முகாமை கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய விமானப்படை குண்டுகள் வீசி அழித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் விமானப்படை மறுநாள் புதன்கிழமை காஷ்மீரில் உள்ள 4 ராணுவ நிலைகளை குண்டு வீசி அழிக்க முயற்சி செய்தது.

பாகிஸ்தானின் 20 அதிநவீன விமானங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டத்துக்குள் வட்டமடித்த அந்த விமானங்களை இந்திய போர் விமானங்கள் சுற்றி வளைத்து விரட்டின. இதனால் பாகிஸ்தான் போர் விமானங்கள் தங்கள் வான் பகுதிக்குள் திரும்பின.

அப்போது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் 2 பாகிஸ்தான் விமானங்களை விரட்டி சென்ற போது இந்தியாவின் மிக்-21 விமானம் தாக்கப்பட்டு பழுதடைந்தது.

இதையடுத்து அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைதியாக சிறை பிடித்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினந்தன் போர் கைதியாக பாகிஸ்தானிடம் சிக்கிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. “அவரை தாக்கக் கூடாது. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று இந்தியா எச்சரித்தது. ஜெனீவா ஒப்பந்தத்தின் பேரில் அபினந்தன் விடுவிக்கப்பட வேண்டும் என்று தூதர் மூலம் வலியுறுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேற்று காலை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நேரில் சென்று அபினந்தனை விடுவிக்க வலியுறுத்தினார். இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சவூதி அரேபிய இளவரசர் முகமதுபின் சல்மான், அபுதாபி இளவரசர் ஜாயித் அல் நயேன் ஆகியோர் பிரதமர் மோடியுடன் போனில் பேசினார்கள். பிறகு அவர்கள் அனைவரும் அபினந்தனை உடனே விடுவிக்கக் கோரி பிரதமர் இம்ரான்கானுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இதற்கிடையே, பாகிஸ்தான் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அபினந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்தியாவும் ஓசையின்றி நேற்று முன்தினம் இரவு முதல் முப்படைகளையும் தயார்படுத்தியது.

இதனால் வேறு வழியின்றி பணிந்த இம்ரான்கான் நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் பேசுகையில், “அபினந்தன் நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார்” என்று அறிவித்தார்.

அபினந்தனை வரவேற்க இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து வாகாவுக்கு புறப்பட்டு சென்றது. அதுபோல அபினந்தனின் பெற்றோர் வர்தமான்-டாக்டர் ஷோபா மற்றும் உறவினர்களும் டெல்லியில் இருந்து விமானத்தில் அமிர்தசரசுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து காரில் வாகா எல்லைக்கு சென்றனர்.

இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தானில் இருந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார். 35 வயது நிரம்பிய அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் சிறைபிடித்ததும் எல்லையில் இருந்து ராவல்பிண்டிக்கு அழைத்து சென்று இருந்தனர். அங்கு ராணுவ முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

அங்கு வைத்துதான் அவரிடம் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேசினார்கள். நேற்றும் அவர் அங்குதான் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் அவர் ராவல்பிண்டியில் இருந்து லாகூர் நகருக்கு பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பாகிஸ்தான் அதிகாரிகள் வாகனங்கள் புடைசூழ வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று மாலை வாகா எல்லை வந்தடைந்த அபினந்தனை இந்திய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகள் முறைப்படி இந்தியாவிடம் மாலை ஐந்தரை மணியளவில் ஒப்படைத்தனர். பிரபாகரன், ஆர்.ஜி.கே.கபூர் ஆகியோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

அபினந்தனின் விடுதலை தொடர்பாக இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களுக்கு விரிவாக பேட்டியளிக்க உள்ளார்.
Image may contain: one or more people and people standingImage may contain: 1 person, smilingImage may contain: 2 people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.